Saturday 7 September 2013

புட்டும் கடலையும்


                                          புட்டும்  கடலையும்
                                           --------------------------



பூவையின் எண்ணங்களில் சமையல் குறிப்புகள் எழுதி நாட்கள் பல ஆகின்றன. நான் சற்றும் எதிர்பாராவகையில் பூவையின் எண்ணங்கள் பதிவு மூன்று முறையோ அதிகமாகவோ வலைச் சரத்தில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.வாசகர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. நான் எழுதும் சமையல் குறிப்புகளைப் படிப்பதோடு நிற்காமல் செய்தும் பார்த்துக் கருத்திடக் கோருகிறேன். இந்த முறை கேரளத்தில் பிரசித்தி பெற்ற புட்டு பற்றியும் அதற்குக் கூட்டாக கடலையும் செய்வது பற்றி எழுதுகிறேன். புட்டு என்றவுடன் “புட்டுக்கு மண் சுமந்த ஈசனின்திருவிளையாடல் நினைவுக்கு வரலாம். இந்தப் புட்டு அந்தக் காலப் புட்டுதானா தெரியாது. எந்தக் காலப் புட்டானால் என்ன.? இது கேரள பாரம்பரிய ஒரு உணவு வகை.இதன் செய்முறையைக் கூறுகிறேன்

 செய்வதற்குத் தேவையான புட்டு மாவு தயாரிக்கும் முறை.

நல்ல பச்சரிசியை நன்றாகக் கழுவிநீரை வடிகட்டிக் காய வைக்கவும் காயவைக்கும்போது அது வெடவெடவென்று உலறும் முன் சற்றே ஈரப்பதம் இருக்கும்போதே அரைத்து சலித்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். இந்தப் பொடியை லேசாக வறுத்து வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம் கேரளாவில் சிவப்பு புழுங்கல் அரிசி உபயோகிக்கிறார்கள்.கடைகளில் புட்டுப் பொடி என்றே விற்கிறார்கள்.


புட்டுக் குழல்
இந்தப் புட்டுப் பொடியில் சிறிதே தேவைக்கேற்ற உப்பு கரைத்த நீர் ஊற்றி கலக்க வேண்டும். நீரின் அளவு புட்டு மாவைக் கையில் பிடித்தால் பிடிப்பு கிடைக்க வேண்டும். அதேசமயம் பிடியைத் தளர்த்தினதும் கெட்டிப் படாமல் இருக்க வேண்டும். இந்த செய்முறை சரியாக வராவிட்டால் புட்டு வேக வைத்தபின் ஆங்காங்கே கெட்டியாக இருக்கும் வாய்ப்புண்டு.இதை ஆவியில் வேகவைக்கப் புட்டுக் குழல்கள் கிடைகின்றன. புட்டுக்குழலில் சிறிது மாவை(ஒன்று முதல் ஒன்றரை அங்குல கனம் வரும்வரைத் திணிக்கவும். அதன் மேல் துருவிய தேங்காய் போடவும். மேலும் அதன் மேல் முதலில் சொன்னபடி மாவைத் திணிக்கவும். பின் தேங்காய்த் துசுவலைச் சேர்க்கவும். இப்படியே புட்டுக் குழாய் கழுத்துவதுவரை நிரப்பவும் பிறகு குழலின் மூடியால் மூடவும். . புட்டுக் குழலின் கீழ்ப் பாத்திரத்தில் சிறிது நீரை ஊற்றி அதன் மேல் குழலை வைத்து ஆவியில் வேக வைக்கவும் வெந்து எடுக்கும்போது புட்டு உருளைகள் அழகாக வெளிவரும்.

அவித்த புட்டு உருளைகள்.       

புட்டுக் குழல் கிடைக்கவில்லை என்றால் இட்லிப் பாத்திரத்தில் இட்லி அவிப்பது போல் இட்லிக் குழியில் மாவையும் தேங்காய்த் துருவலையும் கலந்து  ஆவியில் வேக வைக்கலாம். எப்படிச் செய்தாலும் அது வயிற்றுக்குள் போகும் போது ஷேப்பே மாறிவிடும். இந்த ஆவியில் வெந்த புட்டினை உண்ணும் விதம் அவரவர் விருப்பம் போல் இருக்கும். சாதாரணமாக  இந்தப் புட்டை நெய் சர்க்கரை வாழைப்பழம் இவற்றுடன் பிசைந்து சாப்பிடுதல் ஒரு முறை.
இன்னொரு முறையில் கொண்டைக் கடலை வேக வைத்துக் குழம்பு செய்து அதனுடன் உண்ணலாம்.

கொண்டைக் கடலையை முன்னிரவே நீரில் ஊறவைத்து அதை குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணை ஊற்றி தாளிதம் செய்யும்போது பொடியாய் நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து உப்பு மஞ்சப் பொடி மிளகாய்ப் பொடி மல்லிப்பொடி இவற்றுடன் சிறிது நசுக்கிய இஞ்சி கறுவேப்பிலை சேர்த்து வதக்கவும் அதன் பின் சிறிது நீரூற்றி வேகவைத்தக் கடலையையும் சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும். இதைப் புட்டுடன் கலந்து சாப்பிடலாம்
சிலர் கடலைக்குப் பதில் பாசிப்பயரை உபயோகிக்கிறார்கள்
.
புட்டுக் கடலையோ, புட்டுப் பழமோ காலை உணவாகும் போது உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் மதியம் வரை பசியை விரட்டிவிடும்.

என்ன நண்பர்களே செய்து பார்த்துக் கருத்து தெரிவிக்கலாமே.