Saturday, 23 April 2016

ஆவக்காய் ஊறுகாய்


                                              ஆவக்காய் ஊறு காய்
                                             ------------------------------------
 நல்ல முற்றிய மாங்காய்களை எடுத்துக் கொள்ள வேண்டும் பழுத்திருக்கக் கூடாது அவரவர் தேவையைப் பொறுத்தும் கிடைக்கும் மாங்காய்களைப் பொறுத்தும் வேண்டிய அளவு செய்யலாம் தகுந்த பாதுகாப்பு முறைகளைக் கையாண்டால்  ஊறுகாய் கெடாமல் பல மாதங்கள் வரும்
முதலில் மாங்காய்களை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும் அவற்றை நல்லதுணியால் ஈரம் போகத் துடைக்க வேண்டும் மாங்காய்கள் ஈரமாக இருக்கக் கூடாது. அவற்றை எட்டு ஆகவோ மாங்காய் பெரிதாயிருந்தால் எந்த சைஸ் வேண்டுமோ அதன்  படியும் நறுக்கிக் கொள்ள வேண்டும் கொட்டைகளை எடுத்து விட வேண்டும்  நறுக்கிய காய்களை ஏதாவது பாத்திரத்தில் போட்டு நிரப்பி அளந்து கொள்ள வேண்டும் இதை  ஏன்  செய்ய வேண்டும்  என்றால் உப்பின்  அளவை நிர்ணயிக்கத்தான் . ஐந்து பாத்திர காய்களுக்கு ஒரு பாத்திர உப்பு என்பது அளவு. கல் உப்பே உபயோகிக்கவேண்டும்உப்பு சேர்த்த மாங்காயுடன்  மிளகாய்த்தூளையும் கலக்க வேண்டும் உப்பின் அளவில் முக்கால் அளவு மிளகாய்த்தூள் என்றும்  அரை அளவு கடுகுப் பொடியும் கால் அளவு வெந்தையப் பொடியும் சேர்க்கலாம் இதில் நல்ல எள் எண்ணையையும்  சேர்த்துக் கிளறவேண்டும் மாங்காய் உப்பு மிளகாய்த்தூள் கலவையில் எண்ணையை ஊற்றினால் எண்ணையில் கலவை மூழ்கி இருக்க வேண்டும் இந்தக் கலவையை ஒரு பெரிய பரணியில் போட்டு பரணியின் வாயை நல்ல துணியால் கட்டி மூட வேண்டும்  சிலர் இந்தக் கலவையில் பூண்டும் பச்சைக் கொத்துக்கடலையும் போடுவார்கள்அது அவர்களின் சுவையைப் பொறுத்தது இரண்டு நாட்களுக்கு  ஒரு முறை பரணியைத் திறந்து மீண்டும் நன்கு கிளறி  ஊற விட வேண்டும் ஊறு காய் போடட பத்து நாட்களுக்குப் பின் உபயோகிக்கலாம்                      
                   

 

                       


Monday, 27 July 2015

காராமணி புளிக்குழம்பு


                                      காராமணி புளிக்குழம்பு
                                      ----------------------------------


ட்டைப் பயறு புளிக்குழம்பு
தினமும் பருப்புப் போட்டு சாம்பார் ரசம் என்று வைப்பதில் இருந்து கொஞ்சம் விலகி ஒரு புளிக்குழம்பு செய்முறை இம்முறை
.
தேவையான பொருட்கள்
இரண்டு கைப்பிடி அளவு தட்டைப் பயறு (காராமணி) சிறிது புளி கொஞ்சம் தேங்காய் மல்லித் தூள், மிளகாய்த்தூள் மஞ்சத்தூள் கருவேப்பிலை,  வெங்காயம்(பெரியது ஒன்று அரைக்க, அரிந்து எடுத்த வெங்காயம் சிறியது தாளிதத்தில் வறுக்க.) எண்ணை

செய்முறை
காராமணியை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும் தேங்காயுடன் மல்லித் தூள், மிளகாய்த்தூள் வெங்காயம்  சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும் புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும் கடாயில் எண்ணைவிட்டுகருவேப்பிலையுடன்  தாளிக்கவும் அதில் அரிந்த வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும் அதில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய்க் கலவையையும் சேர்த்து வதக்கவும்  புளிக்கரைசலை ஊற்றி மஞ்சத்தூள் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும் நன்கு கொதித்தவுடன்  அதில் வேக வைத்தக் காராமணியையும் சேர்க்கவும் நன்றாகக் கலந்து கொதித்தவுடன் இறக்கி வைக்கவும் சாதத்தில் பிசைந்து சாப்பிட குழம்பு ரெடி.
சாதத்தில் பிசைந்து சாப்பிடும்போது, சிறிது நல்லெண்ணையையை ஊற்றிக் கலந்து சாப்பிடுவது அவரவர் விருப்பம்    

Sunday, 26 July 2015

இஷ்டு


                                                     இஷ்டு
                                                     ----------


அண்மையில் பாலக்காடு சென்றிருந்தபோது நண்பன் மதுசூதனனின் காருண்யா இல்லத்தில்காலை உணவு உட்கொண்டோம் தோசையுடன் தொட்டுக்கொள்ள ஒரு பதார்த்தம் வைத்தார்கள் கேரளத்தில் இது நன்றாக அறியப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் நாட்டில் எப்படி என்று தெரியாது. என் வீட்டிலும் அவ்வப்போது மனைவி செய்வாள் அதன் செய்முறைக்கு முன் அதன் பெயர் பற்றி ஓரிரு வார்த்தைகள் மலையாளிகள் இதனை இஷ்டு என்கின்றனர். அதென்ன அப்படி ஒரு பெயர் என்று ஆராயப் போனாலது ஆங்கில ஸ்ட்யூ(STEW)  வின் மருவல் எனப் புரிந்தது.

இனி தேவையான பொருட்கள்

பச்சை மிளகாய் பெரிதாக நறுக்கியது வெங்காயம் நறுக்கியது , உருளைக் கிழங்கு வேகவைத்துத் தோல் உரித்தது, சிறிது இஞ்சி, தேங்காய் துருவி எடுத்து அதிலிருந்து பிழிந்தெடுத்த பால் கொஞ்சம் , சிறிது தேங்காய் எண்ணை. கருவேப்பிலை

செய்முறை

பச்சைமிளகாய் வெங்காயம் இஞ்சி ஆகியவற்றை கொதிக்க வைத்த நீரில் வேகவிடவும் நன்கு வெந்தபின் வேகவைத்து தோலுரித்த உருளைக் கிழங்கை பொடியாக நறுக்கித் தூவி விடவும் தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்  இந்தக் கலவையில்  ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் தேங்காய்ப் பாலைச் சேர்க்கவும் இது ஒரு கொதி வரும் நிலையில் இறக்கி வைத்து சிறிது தேங்காய் எண்ணை கருவேப்பிலை சேர்க்கவும் காலை உணவுக்குத் தொட்டுக்கொள்ள இஷ்டு தயார் இட்லிக்கோ தோசைக்கோ ஆப்பத்துக்கோ தொட்டுக்கொள்ள சுவையாய் இருக்கும்  என்ன நண்பர்களே செய்து பார்க்கிறீர்களா. .       
 






Friday, 24 July 2015

மத்தூர் வடை

                         
                                         மத்தூர் வடை
                                         ------------------
மத்தூர் வடை
--------------
இரண்டு தளங்களையும் பராமரிப்பதில் நேரச்சிக்கல் நேரிடுகிறது. அதற்காகஎன்னைக் கைவிட்டு விடுவாயா என்று தளம் பூவையின் எண்ணங்கள் கேட்கிறது. சமையலுக்காக ஒரு தளம் இருக்கும்போது சமையல் குறிப்புகளை அதில் எழுதுவதுதானே நியாயம்
மணப்பாறை என்றாலேயே முறுக்கு நினைவுக்கு வருகிறது. அது போல்கர்நாடகாவில் மத்தூர்(MADDUR) என்றால் நினைவுக்கு வருவது மதூர் வடை. செய்வதும் எளிது.  தேவையான பொருட்கள்
ரவை, அரிசி மாவு மற்றும் சேர்க்க பச்சை மிளகாய், பொடியாக அரிந்த வெங்காயம் பச்சைக் கொத்துமல்லி. சுவை சேர்க்க நிலக்கடலை அல்லது முந்திரிப் பருப்பு,,   .  மற்றும் வடையைப் பொறித்தெடுக்க எண்ணை. ரவை அரிசிமாவு மற்ற பொருட்கள் எல்லாம் செய்யும் அளவைப் பொறுத்தது ஆதலால் குவாண்டிடி கொடுக்கவில்லை. ஆனால் ஒரு பங்கு ரவைக்கு கால் பங்கு அரிசிமாவு. இந்த ரவை அரிசி மாவை சிறிது வெண்ணை சேர்த்துப் பிசையவும்  இந்தக் கலவையில் அரிந்த வெங்காயம் பச்சை மிளகாய் முந்திரி அல்லது நிலக்கடலை போன்றதைக் கலக்கவும் சிறிதே நீரூற்றி  உப்பு சேர்த்து வடை தட்டும் பதத்துக்கு கொண்டுவரவும்
பிறகு என்ன.? காய வைத்த எண்ணையில் தட்டிய வடையைப் பொறித்தெடுக்கவும் சுவையான மத்தூர் வடை தயார்.


Saturday, 13 June 2015

தோசை இது ஒருவிதம்


                                             தோசைஇது ஒருவிதம்
                                              ---------------------------------

இனி பூவையின் எண்ணங்கள் தளத்தில் தொடர்ந்து இடுகைகள் வரும் . இது ஒரு பிரசவ வைராக்கியம் ஆகக் கூடாது என்று எண்ணுகிறேன் தோசைகள் பற்றிய பதிவுகள்பலரும் எழுதி இருக்கிறார்கள். என் பதிவில் இது ஒரு வித்தியாசமான தோசை என்று எண்ணுகிறேன்
தோசைக்குத் தேவையான பொருட்கள்பச்சரிசி , புழுங்கல் அரிசி உளுத்தம் பருப்பு இவை இரண்டுக்கு ஒன்றுக்கு அரை என்னும் விகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் இத்துடன் ஒரு கைப்பிடி கடலைப் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் துவரம் பருப்புஇரண்டு கைப்பிடி கெட்டி அவல், சிறிது வெந்தயம் இவற்றை நன்றாகக் கழுவி ஊறவைக்க வேண்டும்  ஊறின பின் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும் தோசை எளிதாக வார்க்கும் அளவுக்கு உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ள வேண்டும் பிறகு நான் ஸ்டிக் தவாவில் தோசை வார்த்து எடுக்கவேண்டும் தோசை மிகவும் மெலிசாக வார்க்கக் கூடாது.
தோசை செய்து பார்த்துக் கருத்துக் கூறுங்களேன்

Wednesday, 27 May 2015

பன்னீர் போண்டாவும் மசாலாவும்


                         பன்னீர் போண்டாவும்  மசாலாவும்
                       ------------------------------------------------------
பூவையின் எண்ணங்கள் தளமே என் கவனத்தில் இல்லாமல் சவலைக் குழந்தை மாதிரி இருந்தது. பலரும் அவர்களது மெயின் தளங்களிலேயே சமையல் குறிப்புகள் தருகிறார்கள்சமையலுக்கென்று தனித் தளம் வைத்துக் கொண்டிருக்கும் நான் அப்படி செய்ய விரும்பவில்லை. திடீர் ஞானோதயம் வந்து பதிவிடுகிறேன் முதலில் பன்னீர் போண்டா செய் முறையைக் கூறுகிறேன் செய்வதற்கு எளிமையானது இது
கொஞ்சம் கடலை மாவு ( வழக்கம் போல் அளவுகள் கொடுக்கவில்லை.) செய்யும் குவாண்டிடியைப் பொறுத்து) எடுத்துக் கொள்ளுங்கள் சிறிது அரிசி மாவு, சிறிது கார்ன் மாவு  மிளகாய்த் தூள் உப்பு சீரகப் பொடி, பெருங்காயத்தூள் இவற்றைக் கலந்து சிறிது நீர் ஊற்றிகொஞ்சம் கெட்டியாகவே பஜ்ஜிக்கு செய்யும் பதத்தில் தயார் செய்யவும்
பன்னீரை முக்கால் அங்குல க்யூப்களாக வெட்டி எடுத்துக் கொண்டு அதை இந்த பிசைந்த கலவையில் போட்டு சிறிது நேரம் ஊற விடவும் ஒரு கடாயில் தேவையான எண்ணை ஊற்றி இந்த மாவில் ஊறிய பன்னீரைப் பொரித்து எடுக்கவும் பன்னீர் போண்டா ரெடி
ஒரு கடாயில் சிறிது எண்ணை ஊற்றி தாளிதப் பொருட்களுடன் நன்கு பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிது இஞ்சிப் பூண்டு விழுது சிறிது கரம் மசாலா உப்பு போட்டுக் கிளரவும் நன்றாகக் கிளரிய விழுதில் பொடியாக நறுக்கிய தக்காளியும் சேர்க்கவும் மிகவும் நீராக இல்லாமலும் மிகவும் கெட்டியாக இல்லாமலும் இருக்கும் மாதிரி நீர் விட்டுக் கொதிக்க வைக்கவும்  இந்தக் கலவையில் பன்னீர் போண்டாவைப் போட்டுக் கலக்கவும்
பன்னீர் போண்டாவாகவோ க்ரேவி கலந்தோ அவரவர் விருப்பபடி உண்டு மகிழலாம்








Saturday, 30 August 2014

இதற்கு என்ன பெயர் வைக்கலாம்..?


                        இதற்கு என்ன பெயர் வைக்கலாம்...?
                        --------------------------------------------------
பூவையின் எண்ணங்களில் பதிவிட்டுச் சில காலம் ஆகிறது. அதையும் அவ்வப்போது கவனிக்க வேண்டும் அல்லவா.ஒரு வித்தியாசமான ரெசிபி என்று எழுதினால் அது எல்லோருகும் தெரிந்ததாயிருக்கிறது. இருந்தாலும் இது சாதாரணமாக இடப்படும் ரெசிபி போல் இருக்காது என்ற நம்பிக்கையில்,



வீடுகளில் பொதுவாக சமைக்கும்போது ஒரு சாம்பார். ஒரு ரசம் ஒரு பொறியல் என்று காய்கறிகளின் மாற்றத்தோடு வரும் ஒரு மாற்றத்துக்காக இதை சமைத்துப் பார்க்கலாமே.இதற்குப் பெயர் நீங்களே சூட்டிக் கொள்ளுங்கள். ஏனென்றால் நான் பதிவிட்ட்பின் பலரது வீடுகளிலும் சிறிய மாற்றங்களுடன் இது சமைக்கப் பட்டிருக்கும்

தேவையான பொருட்கள்

தக்காளி ,வெங்காயம் இஞ்சிப்பூண்டு விழுது, பட்டை, லவங்கம்.ஏலக்காய், அளவுகள் நான் கூறப்போவதில்லை. அவரவர் ருசிக்கேற்ப உபயோகிக்க வேண்டியது. மஞ்சப்பொடி. மிளகாய்ப் பொடி, தாளிக்கவும் வதக்கவும் எண்ணை, உப்பு, அரிசி.
 .
செய்முறை

முதலில் அரிசியைக் கழுவி வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும் (மீடியம் சைசில்). தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும் குக்கரில் எண்ணை விட்டு தாளிக்கும் போது பட்டை லவங்கம் ஏலக்காய் சேர்க்கவும் அதில் வெங்காயத்தை வதக்கவும் வதக்கிய வெங்காயத்தில் சிறிது இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் அதன் பின் அரைத்து வைத்த தக்காளியையும் சேர்த்து வதக்கவும் இப்படி  வதக்கியபின் அதில் கழுவி வைத்த அரிசியைச் சேர்த்துக் கிளறவும் (ஏறத்தாழ வறுபடும் அளவுக்கு ) நன்றாக மிக்ஸ் ஆனவுடன் ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் என்று நீர் ஊற்றி  தேவையான அளவு உப்பு மஞ்சப்பொடி மிளகாய்ப் பொடி சேர்த்துக் குக்கரை மூடி இரண்டோ மூன்றோ விசில் வரும் வரை வேக விடவும்.
வெந்தபின் எடுத்துப் பார்த்தால் ரெடி டு ஈட் சாதம் ரெடி.
வெங்காயத்தை வதக்கும்போது விரும்பினால் காரட் பீன்ஸ் போன்ற காய்கறிகளையும் சேர்க்கலாம். விரும்பினால் சிறிது புதினாவையும் அரைத்த்ச் சேர்க்கலாம் இதற்கு உடன் சாப்பிட( தொட்டுக்க) தயிரில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வைக்கலாம் செய்து பார்த்துச் சொல்லுங்கள். என்ன பெயரில் அழைக்கலாம் என்றும் தெரியப் படுத்தவும்