Wednesday 25 December 2013

அவனின்றி கேக் பேக்கலாம்


                            அவனின்றி கேக் “பேக்”கலாம்
                            ------------------------------------------


சென்ற பதிவில் கேக் செய்யும் முறை பற்றி எழுதுவதாகச் சொல்லியிருந்தேன். கேக் செய்முறை விளக்கங்கள் ஏராளமாக வந்திருக்கும். கிருஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டின் போது செய்து மகிழ இவனது கேக் செய்முறை. இதில் என்ன வித்தியாசம் என்றால் மிகச் சாதாரண உபகரணங்களுடன் அவனின்றி(oven) கேக் செய்யலாம்.

கேக் செய்யத் தேவையான பொருட்கள்.
   
மைதா மாவு, சர்க்கரை, முட்டை வெண்ணை, சிறிது பாலேடு, வெனிலா எசென்ஸ், முந்திரிப்பருப்பு பேக்கிங் சோடா
இவற்றின் அளவுகள் வெண்ணை, சர்க்கரை மைதா இம்மூன்றும் ஒரே எடையில் இருக்கவேண்டும். உ-ம் கால் கேஜிமைதா என்றால் கல் கேஜி வெண்ணையும் கால் கேஜி சர்க்கரையும் தேவைப் படும். வீட்டில் எடை போட்டுப் பார்ப்பது கடினம் என்பதால் ஒரு டம்ப்ளர் மாவுக்கு அதற்கும் சற்றுக் குறைவாகச் சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம். நான் டம்ப்ளர் என்று சொல்லும் போது அது 250 ml ( கால் லிட்டர் அளவு கொண்டது, வெண்ணை கால் கேஜிக்கும் சற்று குறைவாக இருக்கும். . இந்த அளவுக்கு இரண்டு முட்டைகள் தேவை படும்.

முதலில் முட்டையை உடைத்து வெள்ளை மஞ்ச்ள் தனித்தனியே வைக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளையை நன்றாகச் சிலும்பவும் நன்றாகச் சிலும்பிய முட்டையின் வெள்ளை பொங்கி எழுந்து ஒரே நுரைபோல் காண வேண்டும். சர்க்கரையைப் பொடித்துக் கொள்ளவும் பொடித்த சர்க்கரையை வெண்ணையில் நன்றாக மிக்ஸ் செய்யவும் மைதாமாவில் சிறிது ( முக்கால் டீஸ்பூன்.?) பேக்கிங் சோடாவை நன்றாகக் கலக்கவும் பேக்கிங் சோடா தூள் பரவலாக நன்றாகவே கலந்திருக்க வேண்டும்.

வெண்ணை சர்க்கரை மிக்சில் கொஞ்சம் கொஞ்சமாக மைதாமாவைப் போட்டு கிளறவும். இந்த கிளறல்தான் சற்றுக் கடினமான வேலை. இந்தக் கலவை இறுக்கம் அதிகம் போல் தோன்றினால் அதில் சிறிது பாலேடு கலக்கலாம். நன்றாகக் கிளறியபின் அதில் அடித்து வைத்த முட்டையின் வெள்ளையைக் கலக்கவும் அதன் பிறகு முட்டையின் மஞ்சளைச் சேர்த்துக் கலக்கவும் இந்தக் கலவை ஒரு homogeneous  mix  ஆக இருக்க வேண்டும் அதில் பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பையும் சேர்த்துக் கடைசியில் ஒரு டீஸ்பூன் வெனிலா எஸ்ஸென்ஸையும் கலக்கினால் கேக் செய்ய “ பாட்டர் “ரெடி.

பொதுவாக கேக் செய்ய oven  வேண்டுமென்பார்கள். அது இல்லாமலேயே கூட கேக் செய்யலாம். குக்கரில் வரும் சாதம் வைக்க வரும் பாத்திரத்தின் உட்புறம் சிறிது வெண்ணை எடுத்து தடவவும் அப்படித்தடவிய பாத்திரத்தில் மைதா பொடி தூவி அது தடவிய வெண்ணையில் ஒட்டிக் கொள்ளுப்படியாக இருக்கும். அதாவது பாத்திரத்தின் உட்புறம் மாவு பூசிக் கொண்ட மாதிரி இருக்க வேண்டும். இந்தப் பாத்திரத்தில் கேக் பாட்டரை போட்டு ( ஒரு இன்ச் உயரத்துக்கு ) சமமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும் முக்கியமாக பாட்டரில் காற்றுத் துளைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
இப்போது கேக் பேக் செய்யத்தயார். குக்குரின் (நான் பான் (pan) உபயோகித்தேன்) உள்ளே இந்தப் பாத்திரம் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் போது பாத்திரம் குக்கரின் எந்த பகுதியிலும் தொடாதபடி  அடியில் குடம் வைக்கும் base கம்பி வைத்து அதன்மேல் வைக்க வேண்டும் முக்கியமாக மிதமான தணலில்தான் கேக் பேக்காக வேண்டும். குக்கரின் gasket-ஐ எடுத்து விட்டு குக்கரை மூடவும்.வெயிட் வைக்கக் கூடாது இரண்டு நிமிட சூட்டுக்குப் பின் ஸ்டவ்வை சிறிதாக்கி அந்த சூட்டில் கேக் வேகட்டும். பதினைந்து இருபது நிமிடங்களில் கேக்கின் வாசனை வரும். குக்கரின் மூடியை எடுத்து கேக் பேக்காகி இருக்கிறதா என்று சோதிக்கவும் கேக் பாட்டரில் ஒரு கத்தியைச் சொறுகினால் ஒட்டக் கூடாது. ஒட்டினால் இன்னும் சிறிது நேரம் கழிந்து சோதனை செய்யலாம். நன்றாக பேக் ஆனபின் எடுத்து  ஒரு வட்டத்தட்டில் கவிழ்க்கவும் . நன்றாக பேக் ஆன கேக் பொன்னிறமாக இருக்கும்

கைவேலை தெரிந்தவர்கள் அதன் மேல் ஐசிங் செய்து அலங்கரிக்கலாம்.  கேக் அவனே இல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே கேக் தயாரிக்கும் முறை பற்றிக் கூறி இருக்கிறேன். எங்கள் வீட்டில் நான் செய்யும் இம்மாதிரி கேக் எல்லோராலும் விரும்பி உண்ணப் படும்

கிருஸ்துவின் பிறந்த நாளில் பொதுவாக கேக் செய்யப் படுகிறது. அதுவே எல்லோர் பிறந்த நாளிலும் கேக் செய்யும் பழக்கமாகிவிட்டதோ. அண்மையில் நண்பர் வைகோவின் பதிவில் பெரியவரின் சிந்தனையாக படித்தது நினைவில் வருகிறது. ஜேஷுவா என்னும் பெயர் மருவி ஏசு என்று உச்சரிக்கப் பட்டு வருகிறது. இந்த ஏசுவே ஈசன் ஆகவும் மருவலாம். கிருஸ்து என்னும் பெயர் மருவி கிருஷ்டினன்  ஆகவும் நினைக்கலாம் ஆக ஏசு கிருஸ்து ஈச கிருட்டினன் ஆகவும் கொள்ளலாம் என்று படித்த நினைவு. ஆக இந்த கேக்செய்முறை எல்லா தெய்வங்களுக்கும் சமர்ப்பிக்கப் படுகிறது.

முட்டையின் வெள்ளையை சிலும்ப  
முட்டை வெள்ளை சிலும்பியது  
குக்கர் பான்
                         
குக்கர் பாத்திரம்  

 
குக்கர் பான் பாத்திர சப்போர்ட்டுடன்

 
கேக் பாட்டர் பாத்திடத்தில்

கேக் பாட்டர் போடுமுன் பாத்திரம்
கேக் பாட்டர் ஸ்டவ்வில் மூடும் முன்
cake pieces
                       
baked cake


 

மூன்றாண்டுகளுக்கு முன் நான் செய்த கேக்குடன் என் மாமியாரின் பிறந்தநாள் 


Monday 23 December 2013

பொடித்துவலா பொடுத்துவலா.?


                            பொடித்துவலா பொடுத்துவலா.?
                            -----------------------------------------------



பூவையின் எண்ணக்களில் இதுவரை எட்டே பதிவுகள்தான் எழுதி இருக்கிறேன். பலருக்கும் இம்மாதிரி ஒரு வலைத்தளம் இருப்பதும் அது gmb writes எழுதும் என்னால்தான் எழுதப் படுகிறதென்பதும் தெரியாது, அதனால்தானோ என்னவோ இரண்டு மூன்று முறை வலைச் சரத்தில் அறிமுகப் பட்டிருக்கிறது. வெறுமே ஒரு வலைத் தளத்தை உருவாக்கி அதில் பதிவுகள் எழுத வில்லை என்றால்...... என்ன குடியா மூழ்கிவிடும். ? இருந்தாலும் அவ்வப் போது வலைப் பூவை ரட்சித்தல் அவசியம் என்று தோன்றியதால் மீண்டும் சில சமையல் குறிப்புகளுடன் ஆஜர். புகழ் மிக்க சமையல் பதிவாயினிகள் ( பதிவர்களுக்கு எதிர்மறை.?) இருக்கும்போது என் பதிவுகள் சற்றே வித்தியாசமாக இருக்க வேண்டும் அல்லவா.? எந்த காய்கறிகளை சமையலுக்கு உபயோகித்தாலும் அவற்றின் தனிச் சுவை தெரிய வேண்டும் என்று நம்புகிறவன் நான். ஏகப் பட்ட மசாலாக்களைப் போட்டு காய்கறிகளின் சுவை மழுங்கக் கூடாது. சரி. இன்றைக்கு மிகவும் எளிதாக எவரும் செய்யக் கூடிய பொரியல் ( எங்கள் வீட்டில் பொடுத்துவல் அல்லது பொடித்துவல் என்பார்கள். எளிதாகச் செய்ய கொத்தவரங்காய், பீன்ஸ் அல்லது புடலங்காய் உபயோகிக்கலாம்.
கொத்தவரை . அல்லது பீன்ஸ் காம்பு எடுத்து நாறெடுத்து சுத்தமாகக் கழுவி பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள்வும் 5 mm க்கு மேல் இருக்க வேண்டாம். புடலங்காய் இளசாக இருக்க வேண்டும் தோலைச் சீவி சுத்தம் செய்து, உள்ளிருக்கும் விதைகளை எடுத்துவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் புடலை 10 mm சைசில் இருக்கலாம்.

 தேவையான பொருட்கள். தாளிக்க சற்றே தாராளமாக எண்ணை, கடுகு, பச்சை மிளகாய் ( சற்றே பெரிதாக நறுக்க வேண்டும். பச்சை நிறக் காயுடன் சேர்ந்த சமைப்பதால் வித்தியாசம் தெரிய வேண்டும் ) சிறிது உளுத்தம் பருப்பு, சிறிது கடலைப் பருப்பு. துருவிய தேங்காய்  உப்பு.

 செய்முறை
------------
வாணலியில் எண்ணை விட்டு கடுகு தாளித்து உ. பருப்பு, க, பருப்பு பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பருப்புகள் பொன் நிறத்தில் வறுபடவேண்டும். பிறகு நறுக்கிய காயை போடவும்.சிறிது மஞ்சத்தூள் போடவும் சிறிதே நீர் ஊற்றி வேக வைக்கவும். அவ்வப்போது கிளறிக் கொண்டு இருக்கவும்.வேகும் போது உப்பு சேர்க்கவும். காரமில்லாததால் உப்பின் அளவு குறைவாகவே இருக்க வேண்டும். வெந்து நீர் வற்றியதும் துருவிய தேங்காய் சேர்க்கவும்.

 இப்போதெல்லாம் பொடுத்துவலில் பாதாம் பருப்பு நறுக்கிப் போடுகிறோம். சுவை சேரும். (கவனிக்க வேண்டியது குறிப்பிட்ட காய்களை ஒன்றாகச் சேர்த்து சமைக்க வேண்டாம்)

என்ன நண்பர்களே ( நண்பிகளே ) சமைத்துப் பார்த்துக் கருத்துச் சொல்லவும் அடுத்த பதிவு கேக் செய்முறை ( எளிய வசதிகளுடன் )